தனியார் பங்கு முதலீட்டால் ரியல் எஸ்டேட் துறை புத்துயிர் பெறுமா?
சென்னை: கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய, பல தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.இதனால், கடந்த சில ஆண்டுகளாக, மந்தகதியில் உள்ள நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, புத்துயிர் பெறுவதற்கான அறிகுறி தென்படுகிறது.அதிக வட்டிநாட்டின் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, அதிக வட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தொழில்துறை வளர்ச்சி தேக்கம் கண்டுள்ளது.குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. பல நிறுவனங்களின் கட்டுமான திட்டங்கள், போதிய நிதி வசதி இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துஉள்ளதால், பல கட்டுமான நிறுவனங்களின் அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளன.
இது போன்ற காரணங்களால், கட்டு மான நிறுவனங்களின் கடன் சுமை கடுமையாக உயர்ந்துள்ளது.கடந்த ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், முன்னணியில் உள்ள எட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின், ஒட்டு மொத்த நிகர கடன், 36,977 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதிச் சுமையை குறைத்துக் கொள்ளும் பொருட்டு, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளன.மேலும் பல நிறுவனங்கள், குடியிருப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அவற்றின் விலையை கணிசமாக குறைத்து வருகின்றன.இத்தகைய சூழல் காரணமாக, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில், அதிக அளவில் முதலீடு செய்யத் தயாராகி வருகின்றன.இந்த வகையில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ஏ.எஸ்.கே குழுமும், சென்னை, டில்லி – என்.சி.ஆர்., மும்பை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில், மேற்கொள்ளும் குடியிருப்பு திட்டங்களில், 800 – 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
கட்டுமான திட்டங்கள்இந்நிறுவனம், கடந்த, 2011–12ம் நிதிஆண்டில், ஏற்கெனவே, ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த, ஐந்து நிறுவனங்களின் கட்டுமானத் திட்டங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளது.இதே போன்று, தனியார் பங்கு முதலீட்டு குழுமமான, ஏ.டி.எஸ்., சென்ற ஜூலையில், கூர்கான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், 147 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.ஐதராபாத் தவிர்த்து, சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி – என்.சி.ஆர்., புனே ஆகிய முக்கிய ஐந்து நகரங்களில், புதிய முதலீடுகளை மேற்கொள்ள, ஏ.டி.எஸ்., குழுமம் திட்டமிட்டுள்ளது.இது போன்று, மேலும் பல தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றன.
இதனால், நடப்பாண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் நிறுவனங்களின் பங்கு முதலீடு, 188 கோடி டாலராக (11,687 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 123 கோடி டாலராக (7,657 கோடி ரூபாய்) இருந்தது.வங்கிக்கடன்ரியல் எஸ்டேட் துறையின் சுணக்கத்தால், வங்கிக் கடன் வசதியை பெற முடியாமல் தவிக்கும் பல கட்டுமான நிறுவனங்களுக்கு, கைகொடுக்க, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.இதன் மூலம், நாட்டின் ரியல் எஸ்டேட் துறை, புத்துயிர் பெறுமா என்பது, போகப் போகத்தான் தெரியும்.
கருத்துகள் இல்லை: